வெள்ளி, 22 ஜனவரி, 2016

கர்ப்பம் யாதெனில்?

கவிதை சுமப்பதும்
கர்ப்பம் சுமப்பதும்
ஒன்றுதான்.

நெஞ்சுக்கூட்டுக்குள்
வார்த்தையின்
உயிரணுக்கள்
வந்துமோதும்
வேகத்தில் தான்
கவிதை
கர்ப்பம்
தரிக்கிறது.

படுக்கவிடாது..
உண்ணுதல்
குமட்டும்..
சித்தம்
வேறேதும்
பிடிக்காமல்
அமைதி வாந்தியெடுக்கும்.

பிஞ்சுக்கால்கள்
வைத்து
மூளையை
உதைக்கும்.

தாம்பத்யம்
சிற்றின்பமென்றால்,
இது
வார்த்தைகள்
இணையும்
பேரின்பம்

இதயம் கொள்ளும்
இந்த
எழுத்து நேசம்..
கொழுத்துத்திரியும்
கூடா நட்பல்ல..
செத்தபின்னும்
மறையா
சித்திரக்காதல்...

மொழிகள்
பார்ப்பதில்லை..
வலிகள்
வரையும்
வார்த்தை
ஓவியங்கள்..

நேசிப்பவர்
எங்கிருப்பினும்
வந்துவிடும்
கவிதைக் காதல்.

வயிறு
சுமந்து சரிவதாய்..
வார்த்தைகள்
திரண்டு
பிரசவமாகிறது
கவிதை..

ஆயுதப்பிரசவ
ஆபத்து
கவிதைக்கு
எப்போதும்
கிடையாது..

பெற்றுப்போட்ட
கவிதைக்கு
பெயரும்
வைக்கவேண்டும்
பிள்ளைக்குப்
போலவே..

எல்லாக் கவிதையும்
பொன்குஞ்சுகள்
தான்..
பெற்ற தாய்க்கு..

பொட்டுவைப்பதும்
பூச்சூட்டி
மகிழ்வதும்..

பார்ப்போர்,
படிப்போர்
அதன்
உச்சிமுகர்ந்து
முத்தம் ஒன்று
கொடுத்துவிட்டால்..

நித்தம்
கருத்தரித்து
தாயாக
தாவும்
மனசு..

உணவூட்டல்
போலவே..
கவிதைகளும்
பின்னூட்டத்தில்
வளரும்.

நூறேனும்
சொல்லலாம்
ஒற்றுமை..

வேற்றுமையும்
வேற்று
உவமையும்
உங்களுக்கிருந்தால்
சொல்லி
அனுப்புங்கள்..

இந்த
கவிதைக்
குழந்தையிடமே...

10 கருத்துகள்:

  1. // தாயாக
    தாவும்
    மனசு... //

    ஆகா...
    ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  2. நேசிப்பவர்
    எங்கிருப்பினும்
    வந்துவிடும்
    கவிதைக் காதல்.

    அருமை!
    கவிதையும் கர்ப்பமும் ரசித்தேன்!படைப்பவை ஒவ்வொன்றும் இனிய வலி தரும் பிரசவம் என படைப்பவனுக்கு தான் தெரியும்

    பதிலளிநீக்கு
  3. பிஞ்சுக்கால்கள்
    வைத்து
    மூளையை
    உதைக்கும்.

    தாம்பத்யம்
    சிற்றின்பமென்றால்,
    இது
    வார்த்தைகள்
    இணையும்
    பேரின்பம்//

    அருமை!!

    நேசிப்பவர்
    எங்கிருப்பினும்
    வந்துவிடும்
    கவிதைக் காதல்.//

    ஆட ஆமாம்ல!! உண்மைதான் ஆனால் பாருங்கள்...

    வேற்றுமையும்
    வேற்று
    உவமையும்
    உங்களுக்கிருந்தால்
    சொல்லி
    அனுப்புங்கள்..

    இந்த
    கவிதைக்
    குழந்தையிடமே...//

    சொல்லத்தான் முடியவில்லை.!!! அந்தக் குணா படப்பாடல் கவிதை வந்துக் கொட்டுது சொல்ல நினைக்கும் போது வார்த்தைகள் முட்டுது!!! எங்களது எல்லாமே குறைப் பிரசவம்!!! உங்களது எல்லாமே முழுப் பிரசவமாகி எத்தனைக் குழந்தைகள்! வளர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் இந்த வலைஉலகில் மற்ற குழந்தைகளுடன்!!

    அருமை செல்வா! ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஒப்பீடு.....

    சிறப்பான கவிதை படைத்த உங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. கவிதை நன்று கவிஞரே ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான கவிதை...
    கவிஞரின் வரிகள் சிறப்பு.
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. பின்னூட்டமதைப் பிரசவ லேகியம் என்றும் சொல்லலாமே ,ஜி :)

    பதிலளிநீக்கு
  8. வாவ் சூப்பர் சூப்பர்
    கர்ப்பம் யாதெனில்
    என்ற கேள்வில் உங்கள்
    உள்ளத்திலிருந்து மனக்கருவறையில்
    இருந்து உதித்த அத்தனையும் முத்துக்கள்

    எவ்வளவு அழகாய் இணைக்கப்பட்டுள்ளது வரிகள்
    பிரமாதம் பிரமாதம்
    நிறைமாதக் கர்ப்பினியாய் நீங்கள் பிரசவித்த கவிதை அதற்கிட்ட பெயர் இன்னும் சிறப்பு

    நான் சில நேரம் கவிதை கிறுக்குவேன் அது என்னவோ தெரியல குறைமாதத்தில் பிரசவித்தது போல் என் பார்வைக்கு தெரிகிறது
    ஹா ஹா

    தொடருங்கள் கவிஞரே
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கண்ணா! மனதிலிருந்து வந்த முழுமையான பின்னூட்டப்பகிர்வுக்கு நன்றி,வேலைப்பழுவுக்கு மத்தியிலும் பகிர்ந்தமைக்கும் நன்றி முஸம்மில்!

      நீக்கு
  9. அருமை ஐயா..கவிதையை தாயின் கர்ப்பதோடு இணைத்து எழுதியதில் தங்களின் கவிதை ஆர்வத்தை தெரிந்துக்கொண்டேன் ஐயா..அருமை அருமை..

    பதிலளிநீக்கு