செவ்வாய், 24 நவம்பர், 2015

வீட்ல தக்காளி ரசம்?

என்ன பண்ண?எதைச் சொல்ல நினைத்தாலும்,நினைப்பு முதலில் சின்னவயசுக்குள் ஓடிவிடுகிறது.
எல்லாவற்றிற்கும் அங்கிருந்தே பாதாளக்கரண்டியில் மாட்டிய வாளியாய் செய்திகள் எடுத்து வருகிறது.

பெஞ்சா பெஞ்சுட்டு போகணும்,இல்ல பொட்டுன்னு வெறிக்கனும்.

துணிய எடுத்துட்டு மாடிக்குப்போனா மழை வருது...உருவிட்டு கீழ வந்தா வெயிலடிக்குது..

வானத்துக்குமா எழவெடுத்த நீரிழிவுச்சீக்கு?

எல்லாரும் மழையை எழுதுறாங்களேன்னு  அதையும் செஞ்சாச்சு...
இப்ப என்னத்த எழுத?

விடு கழுத...நமக்கு எதுவும் கிடைக்காமலா போயிடும்...

வீட்டுக்குப்பின்னால கொஞ்சம் காலியிடம்.குளிக்கிற...கழுவுற தண்ணியெல்லாம் சேர்ந்து எப்பவும் கொஞ்சம் ஈரமாய்த்தான் இருக்கும்.
எல்லாச்செடியும் முளைச்சுக்கிடக்கும்.
சுயம்புகள்.நடுவதுமில்லை...
தண்ணீர் நாங்கள் மெனெக்கெட்டு விடுவதுமில்லை.அதுவா வளரும்...காயும்..

ஒருநாள் அதுல ஒரு செடி மஞ்சளா ஒரு பூ பூத்திருந்தது.
அப்பத்தா பார்த்திட்டு..."அடே..அது தக்காளி கண்ணுடான்னு "சொல்ல எல்லார் கண்ணும் அதன் மேல தான்.
சின்னதா பச்சையா ஒரு காய்.மற்றொரு பூ.

உற்றுப்பார்க்கக்கூடாது,விரல் நீட்டக்கூடாது,பக்கத்தில் போகவே கூடாது.

நான்கு காய்கள்..ஆளுக்கொன்றாய் பாகம் பிரித்தாயிற்று.
செடிக்குப்பக்கத்தில் போய் குளித்தோம்.ராத்திரிப் போர்வை மூடிய ரகசியப்பேச்சுகளில் அந்த செடியும் தவறாமல் இடம் பிடித்தது.

பள்ளிசென்று திரும்பிய ஒரு நாளில் வாசலில் அப்பத்தா அப்படி ஒரு அழுகையும் ஆங்காரமுமாக நின்று கொண்டிருந்தது..
எங்களைப்பார்த்ததும் இன்னும் அதிகம் ஆனது..
வீட்டின் பின் பாதிசெடிகள் காணவில்லை.

பக்கத்துவீட்டு ஆடு..அறுவடை செய்துவிட்டு போயிருந்தது தக்காளிச்செடி உட்பட..

எப்போதும் மாலையில் சந்தைக்குப்போகும் அப்பத்தா உடைந்த தக்காளிகளை பல நேரங்களில் இலவசமாய் வாங்கிவரும்.
"உடஞ்சிருந்தா என்னடா...அப்படியேவா எல்லாரும் தின்றாங்க..."

இலவசமாய் டியூசன் சொல்லித்தந்த ஆசிரியை ஒருவர்,தக்காளியை நாலாய் வெட்டி ஜீனி போட்டுத்தருவார்...இனிப்பும் புளிப்புமாய் ஒரு ருசி..

அசிங்கம்பிடித்த மூஞ்சிகளில் அடிக்கப்படுவதைப் பார்க்கும் போது  பாவமாயிருக்கும்...

வரத்து அதிகமாயிருக்கும் நாள்களில் பத்து ரூபாய்க்கு ஐந்து கிலோ எனக்கூவி விற்பார்கள்..ஆசையாய் இருக்கும் ..வாங்கி என்ன செய்ய ஊறுகாய்கூட போட முடியாது .

தக்காளி செடியுடன் இருக்கும்போது பிடுங்கி நுகர்ந்து பார்க்கும்போது ஒரு வாசம்வருமே....
அடடா....அது நுகர்வுகலாச்சாரம் மிகுந்த நாட்கள்...

சின்னவள்...ரசம் வைப்பேன்..தக்காளி வாங்கி வா என்றாள்.
குளிர்ப்பெட்டி இல்லாததால் வீணாகிவிடுமென்று காய்களோடு ஒரு தக்காளி எடுத்துவைத்தேன்.
கடைக்காரர் சிட்டை தந்தார்

தக்காளி=8 ரூபாய்.

ரசம் வைக்க?

16 கருத்துகள்:

  1. வீட்டில் தக்காளி ரசம்..
    எழுத்தில் நவரசம்...
    கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  2. ஒரு தக்காளி எட்டு ரூபாயா? நிஜம்மாவா? அம்மாடியோவ் தக்காளி ரசம் வேண்டாம் விட்டிருங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நிஷா அவர்களே....ஆனால் சின்னவள் வைக்கும் பரவசம் வேண்டுமே...

      நீக்கு
  3. நடந்தால் பஸ் வரும்....பஸ்க்காகநின்றால் வராது என்ற கதைதான்் மழைக்கும் வெயிலுக்கும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. உன் இனிதான எழுத்தைத்போல் சுவைக்கமுடியவில்லை தக்காளி ரசத்தை....
    விசமென ஏறிக்கொண்டிருக்கும் விலையேற்றத்தால்

    பதிலளிநீக்கு
  5. என்னது தக்காளி ஒன்று ரூ 8ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ திறந்த வாய் இன்னும் மூடவில்லை அதான்....ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  6. தக்காளி 140 ரூ பானு வித்துச்சு மழை பெய்த போது...அறிவுகெட்டவங்க....மழை நாள் ல தக்காளி சீக்கிரம் அழுகிவிடும்....அப்ப விலை கம்மியா கொடுத்தா எல்லாரும் வாங்கிட்டுப் போய்டுவாங்கன்ற அடிப்படைப் பொருளாதார விதி கூடத் தெரியாம...140 ...எங்கள் கடைக்காரரின் தக்காளி அழுகி அழுதே விட்டது!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நானும் இங்கே கண்டிருக்கின்றேன். அழுகிப்போய் வீசுவதுக்கு வாங்கிய விலைக்கு விற்றாலும் ந்ஷ்டம் வராது என நினைக்காமல் பேராசைப்பட்டு குடுமுழுகிபோகும் வரை இருப்பார்கள்.

      நீக்கு
  7. பல சமயங்களில் இப்படி விலைவாசி தாறுமாறாகத் தான் இருக்கிறது. இத்தனை விலை விற்றாலும், விதைத்தவனுக்குக் கிடைத்தது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை! வழியில் இருக்கும் பலரும் இலாபம் பார்க்கிறார்கள்!

    நல்ல அனுபவம் தான்!

    பதிலளிநீக்கு
  8. மழையாய் கொட்டி ஊரே தண்ணீர் மயமான அன்று எல்லாக் காய்கறிகளும் 150 வரை விலை போனது...நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் கறிவேப்பிலையை அக்கம் பக்கம் எல்லோரும் பறித்துச் செல்வர்..ஆனால் இரண்டு இலைகள் தந்து விட்டு இரண்டு ரூபாய் என்கிறார்கள்..தலை நகரம் இல்லை இது...விலை நகரம்

    பதிலளிநீக்கு